தமிழ்நாடு

காஞ்சிபுரம்-பொன்னேரியில் நடந்த லோக் அதாலத்தில் 1,038 வழக்குகளுக்கு தீர்வு

Published On 2023-02-12 07:07 GMT   |   Update On 2023-02-12 07:07 GMT
  • பொன்னேரியில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ,குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன
  • சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் மொத்தம் 762 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி (பொறுப்பு)பி.சிவஞானம் தலைமையில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நீதிபதிகள் பி.திருஞான சம்பந்தம், சரண்யா செல்வம், ஜெ.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சார்பு நீதிபதி கே.எஸ்.கயல்விழி வரவேற்று பேசினார். மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நலம் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நில ஆர்ஜித வழக்கு ஆகியன விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள 276 வழக்குகள் விசாரித்து சமரசம் செய்து வைக்கப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.9 கோடியே 42 லட்சத்து 98 ஆயிரத்து 234 வழங்கப்பட்டது. இதில் விரைவு நீதிமன்ற அரசு வக்கீல் தி.சத்தியமூர்த்தி, எஸ்.துரைமுருகன், உதயன், வடிவேல், சரவணன் கலந்து கொண்டனர்.

பொன்னேரியில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ,குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய லோக் அதாலத் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் முதன்மை சார்பு நீதிபதி பிரேமாவதி தலைமையில் கூடுதல் சார்பு நீதிபதி பாஸ்கர் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர் குற்றவியல் நீதிபதிகள் மோகனப்பிரியா, ஐயப்பன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் மொத்தம் 762 வழக்குகள் தீர்வு காணப்பட்டு பொன்னேரி மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக்கப்பட்டுள்ளன. இதில் 11கோடியே 57 லட்சத்து 215 ரூபாய் வசூல் செய்து இழப்பீடு வழங்கப்பட்டன.

முகாமில் பொன்னேரி பார் அசோசியேசன் தலைவர் தேவேந்திரன் சி.எம்.டி.ஏ. வழக்கறிஞர் பிரசன்ன குமார், கூடுதல் சார்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் பல்லவன் மற்றும் அரசு வழக்கறிஞர் அம்ரத் காந்தி உள்பட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News