தமிழ்நாடு

அருப்புக்கோட்டை அருகே ஆடு மேய்த்த வாலிபர்கள் மின்னல் தாக்கி பலி

Published On 2023-05-21 05:41 GMT   |   Update On 2023-05-21 05:41 GMT
  • இன்று காலை பெருமாள், விஜய் ஆகிய 2 பேரும் ஆடு மேய்க்க சென்ற இடத்தில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
  • அண்ணன்-தம்பி உறவுமுறை கொண்ட வாலிபர்கள் ஆடு மேய்த்தபோது மின்னல் தாக்கி பலியான சம்பவம், கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரளச்சி புல்லா நாயக்கன்பட்டி சேர்ந்தவர் பெரிய கிருஷ்ணன் என்பவரது மகன் பெருமாள் (வயது 28), சின்னகிருஷ்ணன் என்பவரின் மகன் விஜய்(27).

உறவினர்களான இவர்கள் இருவரும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தனர். நேற்று ஆடுகளை மேய்ப்பதற்காக ராணி சேதுபுரம் என்ற இடத்திற்கு சென்றனர். வழக்கமாக இருவரும் மாலையில் ஆடுகளுடன் வீட்டிற்கு திரும்பிவிடுவார்கள்.

ஆனால் இருவரும் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த இவர்களது உறவினர்கள், இருவரையும் நேற்று இரவு தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் இன்று காலை பெருமாள், விஜய் ஆகிய 2 பேரும் ஆடு மேய்க்க சென்ற இடத்தில் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் இருவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் சம்பவ இடத்தில் விரைந்து சென்று பார்த்தனர்.

அங்கு 2 பேரும் பிணமாக கிடந்தனர். இது தொடர்பாக பரளச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

நேற்று மாலை அந்த பகுதியில் கடும் இடி-மின்னலுடன் மழை பெய்திருக்கிறது. இதனால் பெருமாள், விஜய் ஆகிய 2 பேரும் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணன்-தம்பி உறவுமுறை கொண்ட 2 வாலிபர்கள் ஆடு மேய்த்தபோது மின்னல் தாக்கி பலியான சம்பவம், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமின்றி புல்லாநாயக்கன்பட்டி கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News