தமிழ்நாடு

கொடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமி ஆஜராகவில்லை

Published On 2024-01-30 08:10 GMT   |   Update On 2024-01-30 09:20 GMT
  • சாட்சியங்களை பதிவு செய்வதற்காக இந்த வழக்கு ஐகோர்ட்டில் உள்ள மாஸ்டர் கோர்ட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
  • ஜனவரி 30, 31ந் தேதிகளில் ஆஜராகி சாட்சியம் வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை:

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2019ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சாட்சியங்களை பதிவு செய்வதற்காக இந்த வழக்கு ஐகோர்ட்டில் உள்ள மாஸ்டர் கோர்ட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஆனால், மாஸ்டர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வக்கீல் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை ஏற்ற தனி நீதிபதி, நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்தோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வக்கீல் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு, எடப்பாடி பழனிசாமி மாஸ்டர் கோர்ட்டில் ஆஜராக அறிவுறுத்தியதை தொடர்ந்து, ஜனவரி 30, 31ந் தேதிகளில் ஆஜராகி சாட்சியம் வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இன்று வழக்கு மாஸ்டர் கோர்ட்டில் பட்டியலிடப்படவில்லை. அத்துடன் பிரதான வழக்கில் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த பதில்மனுவில் தெரிவித்துள்ள அவதூறு கருத்துக்களை நீக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவர் இன்று மாஸ்டர் கோர்ட்டில் சாட்சியம் அளிக்க ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது.

Tags:    

Similar News