தமிழ்நாடு செய்திகள்

கொடைக்கானல் குடிபோதையில் வாலிபர் படுகொலை

Published On 2023-09-08 12:19 IST   |   Update On 2023-09-08 12:19:00 IST
  • கலியமூர்த்தி மயங்கி சரியவே தான் வைத்திருந்த பெல்ட்டை எடுத்து அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.
  • கொலை செய்யப்பட்டு கிடந்த கலியமூர்த்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கொடைக்கானல்:

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் கலியமூர்த்தி (வயது23) இவர் கொடைக்கானல் பள்ளங்கி அருகே உள்ள வாழைக்காட்டு ஓடை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பணியாற்றி வந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிள்ளையார் குளம் பகுதியைச் சேர்ந்த சுகுமார் மகன் குமரன் (27) என்பவரும் கொடைக்கானலில் உள்ள மற்றொரு தனியார் தங்கும் விடுதியில் பணியாற்றி வந்தார். குமரனை கலியமூர்த்திதான் வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார். இவர்கள் 2 பேரும் இரவு நேரங்களில் ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம். அதேபோல நேற்று இரவு இருவரும் வாழைக்காட்டு ஓடை பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு அருகே மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதை அடுத்து குமரன் அருகே இருந்த கட்டையை எடுத்து கலியமூர்த்தியின் தலையில் தாக்கியுள்ளார். இதில் கலியமூர்த்தி மயங்கி சரியவே தான் வைத்திருந்த பெல்ட்டை எடுத்து அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அப்போது கொலை செய்யப்பட்டு கிடந்த கலியமூர்த்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கலியமூர்த்தி மற்றும் குமரன் ஆகிய 2 பேர் மீதும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்கள் போலீசில் சிக்காமல் இருக்க கொடைக்கானலில் ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

எனவே கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News