கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்தமான 11 சோதனை சாவடிகளில் போலீசார் இரவு பகலாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
- கன்னியாகுமரியில் உள்ள அனைத்து லாட்ஜிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
அந்த அடிப்படையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது தவிர கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அதிநவீன ரோந்து படகுகளில் கடல் வழியாக சென்று தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்தமான 11 சோதனை சாவடிகளில் போலீசார் இரவு பகலாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரியில் உள்ள அனைத்து லாட்ஜிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரியில் உள்ள ரெயில் நிலையம், பஸ் நிலையம், கலங்கரை விளக்கம் மற்றும் கடற்கரைப் பகுதியில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 72 கிலோமீட்டர் தூரம் அமைந்துள்ள 42 கடற்கரை கிராமங்களில் போலீசார் தீவிரமாக ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.