கன மழைக்கு சேதமான ஏலக்காய் செடிகள்
கொட்டித் தீர்த்த கன மழையால் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் ஏலக்காய், மிளகு, காபி செடிகள் சேதம்
- மிளகு, காபி, இலவம் பஞ்சு மரங்கள் அதிக அளவில் வடக்கு மலைப்பகுதியில் உள்ளது.
- ஏலக்காய் பயிரிட்டு மகசூல் எடுக்கும் வேளையில் தற்போது பெய்த தொடர் மழையில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே ஏலக்காய் விளையக்கூடிய பகுதி வடக்கு மலை. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் ஏலக்காய் பயிரிடப்பட்டுள்ளது. மேலும் மிளகு, காபி, இலவம் பஞ்சு மரங்கள் அதிக அளவில் இந்த மலைப்பகுதியில் உள்ளது.
இங்கு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் 6 கி.மீ தூரம் நடைபயணமாக சென்று அங்கேயே தங்கி தோட்டத்தை பராமரித்து வருகின்றனர். இதனிடையே இப்பகுதியில் நேற்று பெய்த கன மழை காரணமாக திடீர் நீரூற்றுகள் ஏற்பட்டது. அவை காட்டாற்று வெள்ளமாக மாறி 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ஏலக்காய், மிளகு, காபி, இலவம்பஞ்சு மரங்களை சேதப்படுத்தியது.
போடி முந்தல் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரம் உள்ள இந்த மலைப்பாதையில் 6 கி.மீ. தூரம் நடைபயணமாகவே வடக்கு மலை பகுதிக்கு செல்ல முடியும்.
அதிக அளவில் செலவு செய்து ஏலக்காய் பயிரிட்டு மகசூல் எடுக்கும் வேளையில் தற்போது பெய்த தொடர் மழையில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.