பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: 13 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு
- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்து இருந்தார்.
- பொதுமக்கள் யாரும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புதிய விமான நிலையத்துக்கு பரந்தூர், ஏகனாபுரம், மேலேறி நெல்வாய் உள்ளிட்ட சுற்றி உள்ள கிராமங்களை ஒன்றி ணைத்து 4,750 ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்த அரசு சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கு பரந்தூர், ஏகனா புரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏகனாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று அவர்களது போராட்டம் 433-வது நாளாக நீடித்து வருகிறது.
இந்த நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்து இருந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் பொதுமக்கள் கிராமசபை கூட்டங்களை புறக்கணித்தனர்.
பொதுமக்கள் யாரும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த 13 கிராமங்களிலும் தலைவர் மற்றும் துணைத்தலைவர் மட்டும் கலந்து கொண்டனர். இதனால் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கிராமங்கள் பரபரப்பாக காணப்படுகிறது.
ஏற்கனவே நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. நேற்று பரந்தூர் விமானநிலையம் அமைய உள்ள இடத்தை தமிழக அரசின் உயர்மட்ட குழு ஆய்வு செய்ய வருவதை எதிர்த்து ஏகனாபுரம் கிராமத்தில் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.