தமிழ்நாடு

தமிழிசை சவுந்தரராஜன்

இந்து மதத்தின் அடையாளங்களை மறைக்க முற்படுவது சரியாக இருக்காது- தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2022-10-06 08:56 GMT   |   Update On 2022-10-06 08:56 GMT
  • தஞ்சை பெரிய கோவிலை பார்த்து வளர்ந்தவள் நான், இதில் உள்ள அடையாளங்களை மறைக்க பார்க்கின்றனர்.
  • புதுச்சேரி மாநில மின் ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.

கோவை:

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை விமானம் மூலம் கோவைக்கு வந்தார்.

கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராஜராஜ சோழன் குறித்து டைரக்டர் வெற்றிமாறன் சொன்ன இந்து தொடர்பான கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு கொடுத்து இருப்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்து கூறியதாவது:-

தஞ்சை பெரிய கோவிலை பார்த்து வளர்ந்தவள் நான், இதில் உள்ள அடையாளங்களை மறைக்க பார்க்கின்றனர். கலாச்சார அடையாளங்கள் மறைக்கப்பட்டால் எல்லோரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்.

ஏற்கனவே பல அடையாளங்கள் மறைக்கப்பட்டு இருக்கின்றது. இந்து கலாச்சார அடையாளத்தை தேவைக்காக திருப்பி கொண்டால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு. சைவம், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம் தான். இந்து அடையாளத்தினை மறைக்க முற்படுகின்றனர். அப்படி இந்து அடையாளங்களை மறைக்க முற்பட்டால் அதுசரியாக இருக்காது.

புதுச்சேரி மாநில மின் ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. தனியார் மயமாக்கல் என்றதும், மின்துறையை முழுவதுமாக கொடு்த்து விடுவதாக சிலர் நினைக்கின்றனர். ஆனால் அப்படி எதுவும் இல்லை.

பல துணைநிலை மாநிலங்களில் மின் துறை தனியாருக்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் மக்களுக்கு வேண்டிய அளவிற்கு மின்கட்டணம் குறைக்கப்படும்.

இதனால் மின் ஊழியர்கள், அதிகாரிகள் பணி எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. ஒரு சாராருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இந்த திட்டத்தை கொண்டு வர வேண்டும் என அரசுக்கு எண்ணம் கிடையாது. மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்பட்ட முடிவு தான் இது.

இது தொடர்பான முடிவுகள், முதல்வருடன் பேசித்தான் எடுக்கப்படுகின்றது. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சொன்னது கூட பொதுமக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக தான். இதை ஊழியர், அதிகாரிகள் புரிந்துகொண்டு இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News