தமிழ்நாடு செய்திகள்

இளம்பெண்ணை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்- போலீஸ் விசாரணை

Published On 2023-03-27 12:09 IST   |   Update On 2023-03-27 12:09:00 IST
  • முருகன் மீது பல்வேறு பிரிவின்கீழ் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • சந்தேகத்தால் மனைவியை ரோட்டில் ஓட ஓட விரட்டி கணவர் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்:

சேலம் நெத்திமேடு கே.பி.கரடு தென்புறம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 50). சலவை தொழிலாளியான இவருக்கு மலர் (37) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மகனும் வெளியூரில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில் சமீப காலமாக முருகனுக்கு மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

நேற்றும் வழக்கம்போல் முருகனுக்கும் அவரது மனைவி மலருக்கும் தகராறு ஏற்பட்டதால் மதியம் மலர், நெத்திமேடு எம்.ஜி.ஆர். நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவரது பெற்றோர் வெளியூர் சென்றுவிட்டதால் அங்கு மலர் வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது அங்கு வந்த முருகன், மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டு மறைத்து வைத்திருந்த அரிவாளால் மலரை வெட்டினார். இதனால் நிலைகுலைந்த மலர் வெட்டுக் காயங்களுடன் தப்பித்து ரோட்டில் ஓடினார். ஆத்திரம் தீராத முருகன் ரோட்டில் ஓட ஓட விரட்டி மனைவியை சரமாரியாக வெட்டினார்.

இதில் படுகாயம் அடைந்த மனைவி ரோட்டில் சுருண்டு விழுந்தார். இந்த சம்பவத்தில் எதிர்பாராத விதமாக முருகனுக்கும் கையில் வெட்டு விழுந்துள்ளது. இதைக் கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக கணவன்-மனைவி இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் மலருக்கு தலை, கழுத்து, கை, நெஞ்சு என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக்காயம் விழுந்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து புகாரின்பேரில் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார், முருகன் மீது பல்வேறு பிரிவின்கீழ் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தேகத்தால் மனைவியை ரோட்டில் ஓட ஓட விரட்டி கணவர் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News