தமிழ்நாடு

கீழ்பென்னாத்தூர் வங்கியில் தீ விபத்து- கம்ப்யூட்டர் பொருட்கள் கருகி நாசம்

Published On 2023-10-19 10:19 GMT   |   Update On 2023-10-19 10:19 GMT
  • காசாளர் அறையில் இருந்து மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
  • உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் வங்கியில் இருந்த பணம், நகைகள் தப்பின.

கீழ்பென்னாத்தூர்:

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் இருந்து வேட்டவலம் செல்லும் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது.

இந்த வங்கியில் நேற்று இரவு சுமார் 1 மணி அளவில் திடீரென புகை வெளியே வந்தது. இதனைப்பார்த்த அங்கிருந்தவர்கள் கீழ் பென்னாத்தூர் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

ஆனால் வங்கி பூட்டப்பட்டு இருந்ததால் பக்கவாட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்தனர். அப்போது வங்கியின் காசாளர் அறையில் இருந்து தீ எரிந்து கொண்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து அதனை ஜன்னல் வழியாக அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

இதையடுத்து முன்பக்க கதவை தீயணைப்பு வீரர்கள் உடைத்து கொண்டு உள்ளே சென்று தீயை அணைத்தனர். காசாளர் அறையில் இருந்து மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த தீ விபத்தில் காசாளர் அறையில் இருந்த கம்ப்யூட்டர், பணம் எண்ணும் எந்திரம் மற்றும் ஆவணங்கள் தீயில் கருகி நாசமானது. இதையடுத்து வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்து இதர ஆவணங்களை அங்கிருந்து பாதுகாப்பாக எடுத்துச்சென்றனர்.

உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் வங்கியில் இருந்த பணம், நகைகள் தப்பின. மேலும் இந்த தீ விபத்து குறித்து கீழ் பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து காரணமாக இந்த வங்கிக்கு தற்காலிகமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவசர காலத்தில் சோமாசிபாடி கிளை வங்கியில் தற்காலிகமாக பணம் பரிவர்த்தனை செய்து கொள்ள அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News