தமிழ்நாடு

இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., டி.டி.வி. ஆகியோர் அண்ணாமலைக்கு காவடி தூக்கியது அவமானம்- கே.பாலகிருஷ்ணன்

Published On 2024-04-16 04:04 GMT   |   Update On 2024-04-16 04:04 GMT
  • இந்தியாவில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இதுவாகும்.
  • இட ஒதுக்கீடு கொள்கையை நிராகரிக்கும் பா.ஜ.க.வோடு பா.ம.க. கூட்டு வைத்திருப்பது ஒவ்வாத சந்தர்ப்பவாத கூட்டணியாகும்.

பழனி:

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பழனியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மக்கள் வாங்க முடியாத அளவுக்கு அனைத்து பொருட்களின் விலைவாசியும் அதிகரித்துள்ளது. வேலை இல்லா திண்டாட்டம் இந்தியா முழுவதும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வழி தவறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் இதைப்பற்றியெல்லாம் ஒன்றும் குறிப்பிடவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் ஆகியவை நாட்டுக்கு மிகுந்த ஆபத்தானது. நெல்லுக்கு நல்ல விலை விவசாயிகள் கேட்கிறார்கள். ஜி.எஸ்.டி. மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டும். இது குறித்து பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் எதுவும் சொல்லவில்லை. 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குவோம் என்றார்கள். அதனை நிறைவேற்றவில்லை.

ஆனால் பா.ஜ.க. கடந்த ஆட்சியில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக அண்ணாமலை கூசாமல் பொய் சொல்லி வருகிறார். தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா கூட்டணி நாடு முழுவதும் மகத்தான வெற்றி பெறும்.

பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மோடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் ஆவலுடன் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் நாட்டின் அரசியல் சுதந்திரம் பாதுகாப்பாக இருக்காது.

இந்தியாவில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இதுவாகும். ஆனால் எடப்பாடி பழனிசாமி மோடி அரசைப்பற்றி எந்த விமர்சனமோ, கேள்வியோ கேட்பதில்லை. அந்த அளவுக்கு மோடியை கண்டு அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வர் மு.க.ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக நினைத்து அவரை மட்டுமே குறி வைத்து பேசி வருகிறார்.

இட ஒதுக்கீடு கொள்கையை நிராகரிக்கும் பா.ஜ.க.வோடு பா.ம.க. கூட்டு வைத்திருப்பது ஒவ்வாத சந்தர்ப்பவாத கூட்டணியாகும். இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. காணாமல் போய் விடும். டி.டி.வி. தினகரன் பக்கம் தொண்டர்கள் வந்து விடுவார்கள் என அண்ணாமலை பேசுகிறார். அ.தி.மு.க. தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை அண்ணாமலைக்கு அ.தி.மு.க.வே கொடுத்து விட்டது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன் உள்பட அனைவருமே அண்ணாமலைக்கு காவடி தூக்கியதன் விளைவு இன்றைக்கு அவர்களை ஏறி மிதிக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News