தமிழ்நாடு

கோவிலில் மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

Published On 2023-10-20 06:48 GMT   |   Update On 2023-10-20 06:48 GMT
  • ஸ்ரீகற்பக விநாயகர் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கற்பக விநாயகர் ஆலயத்தில் பெருமாள் வேலை பார்த்து வந்தார்.
  • மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட பெருமாள் உணர்வற்று விழுந்தார்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 52). இவர் அருகே உள்ள ராமநாதபுரத்தில் இருக்கும் ஸ்ரீகற்பக விநாயகர் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கற்பக விநாயகர் ஆலயத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று பெருமாள், வழக்கம் போல் வேலைக்குச் சென்றார். அவர் கோவிலில் பணிகளை செய்து கொண்டிருந்த மாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது. மேகங்கள் திரண்டிருந்ததால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

கோவிலுக்குள்ளும் வெளிச்சம் இல்லாததால், பெருமாள் மின்விளக்கு சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெருமாள் உணர்வற்று விழுந்தார்.

இதனை பார்த்து கோவிலுக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக பெருமாளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில், கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பெருமாள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

மழையின் காரணமாக சுவிட்ச் போர்டு இருந்த கோவில் சுவற்றில் நீர் கசிந்து இருந்ததும் அது தெரியாமல் பெருமாள் சுவிட்ச் போட்டபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான பெருமாளுக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

Tags:    

Similar News