தமிழ்நாடு

வள்ளி கும்மியாட்டத்தை ரசித்து பார்த்த எடப்பாடி பழனிசாமி- தமிழகம் முழுவதும் கும்மியாட்டம் நடைபெற உறுதுணையாக இருப்போம்

Published On 2023-07-23 04:18 GMT   |   Update On 2023-07-23 04:18 GMT
  • நமது பாரம்பரிய கலையான கும்மி கலை புத்துயிர் பெற்று வருவதை கண்டு உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகின்றோம்.
  • தொலைக்காட்சி போன்ற விஞ்ஞான வளர்ச்சியினால் அழிந்து வரும் கும்மியாட்ட கலையை வளர்க்க வேண்டும்

சேலம்:

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கொங்கு பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் திருவிழாவாக மங்கை வள்ளி கும்மி குழுவின் 75-வது பவள விழாவையொட்டி வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றம் நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று கும்மியாட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ரசித்து பார்த்தார்.

2ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கொங்கு பாரம்பரிய கும்மியாட்ட கலை ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போது நாட்டுப்புற பாடல் பாடி ஆடுவது தான் இதன் சிறப்பம்சம். பல்வேறு இடங்களில் இந்த கலையை நடத்தி வரும் கலைஞர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொங்கு மண்டலத்தில் கோவில் திருவிழாக்களின் போதும், குடமுழுக்கின் போதும், திருமண நிகழ்ச்சியின் போதும் பெண்கள் ஒன்று கூடி பாடுவது மட்டுமல்லாமல், பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் கலந்து கொண்டு கிராமிய கலையை ஊக்குவிக்கும் விதமாக, அனைவரையும் ஈர்க்கும் அற்புதமான கலை ஆகும். நமது பாரம்பரிய கலையான கும்மி கலை புத்துயிர் பெற்று வருவதை கண்டு உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகின்றோம்.

திரைப்படம், ரேடியோ, தொலைக்காட்சி போன்ற விஞ்ஞான வளர்ச்சியினால் அழிந்து வரும் கும்மியாட்ட கலையை வளர்க்க வேண்டும் என்ற நமது முன்னோர்களின் கனவை நமது சகோதரிகள் நிறைவேற்றி வருகிறார்கள். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் போது இந்த கும்மியாட்ட கலையை கொங்கு மண்டலம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு அ.தி.மு.க. உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கும்மியாட்ட கலை நிகழ்ச்சியில் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் பங்கேற்று கும்மியாடினர். 

Tags:    

Similar News