தமிழ்நாடு

அவதூறு பரப்பும் தனபாலிடம் ஒரு கோடியே 10 லட்சம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி- ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2023-09-19 07:57 GMT   |   Update On 2023-09-19 10:37 GMT
  • தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.
  • கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை:

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனக ராஜின் சகோதரர் தனபால், சமீப காலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டி அளித்து, அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கட்சியின் பொதுச்செயலாளராக நான் பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.

அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடை பெற உள்ள நிலையில் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருகிறார்.

கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, என்னை பற்றி பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை தொடர்வதற்கான அனுமதியை கோரிய மனு நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை தொடர்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளார்.

Tags:    

Similar News