தமிழ்நாடு

மீன்வளத்துறை அதிகாரியை மிரட்டிய தி.மு.க. பிரமுகர்: வாட்ஸ்-அப்பில் வீடியோ பரவியதால் பரபரப்பு

Published On 2022-09-29 03:09 GMT   |   Update On 2022-09-29 03:09 GMT
  • உவரியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதாக மீன்வளத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
  • உத்திராண்டு ராமன் கொடுத்த புகாரின்பேரில் உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணிராயை வலைவீசி தேடிவருகின்றனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் உவரியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதாக மீன்வளத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்கள் உத்தரவின்பேரில் ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் உத்திராண்டு ராமன், உவரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது, அங்கு சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்கள் பிடிக்கப்பட்டது தெரியவந்தது. அவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களை உத்திராண்டு ராமன் பறிமுதல் செய்ய முயன்றார்.

அந்த சமயத்தில் அங்கு உவரி மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவரும், தி.மு.க. பிரமுகருமான அந்தோணி ராய் என்பவர் வந்தார். அவர் மீன்வளத்துறை அதிகாரி உத்திராண்டு ராயிடம் தகராறு செய்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவரை பணி செய்ய விடாமல், தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உத்திராண்டு ராமன் கொடுத்த புகாரின்பேரில் உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணிராயை வலைவீசி தேடிவருகின்றனர். இதற்கிடையே, மீன்வளத்துறை அதிகாரியை, அந்தோணி ராய் மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வாட்ஸ்-அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News