தமிழ்நாடு

புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் தி.மு.க.வினர் முழுமையாக ஈடுபட வேண்டும்- தி.மு.க. தலைமைக்கழகம் அறிக்கை

Published On 2023-09-30 10:40 GMT   |   Update On 2023-09-30 10:40 GMT
  • அக்டோபர் 27-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
  • நவம்பர் 4, 5-ந்தேதி மற்றும் 18, 19-ந்தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

சென்னை:

தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1.1.2024 தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதின்று வெளியிட உள்ளது.

அக்டோபர் 27-ந்தேதி முதல் டிசம்பர் 9-ந்தேதி வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும் மற்றும் பெயர்கள் நீக்கவும்-திருத்தம் செய்யவும் மனு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர 4.11.2023 (சனிக்கிழமை), 5.11.2023 (ஞாயிற்றுக்கிழமை), 18.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 19.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும், 1-1-2024 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து, அந்தப் படிவங்களை அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும்-வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும்-புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும்; தொகுயிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும், தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அக்டோபர் 27-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

அக்டோபர் 27-ந்தேதி முதல் டிசம்பர் 9-ந்தேதி வரை பெயர்களைச் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வதற்கு மனு கொடுக்க கால அவகாசம் வழங்கப்படும்.

நவம்பர் 4, 5-ந்தேதி மற்றும் 18, 19-ந்தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும். 1-1-2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள படி, சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கும் நாட்களில், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், ஊர்க்கிளை, வார்டு கழக செயலாளர்-நிர்வாகிகள் மற்றும் வாக்குச் சாவடி நிலைய முகவர்கள் ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் சிறப்பு அக்கறையோடு கழக அமைப்புகளை இப்பணியில் ஈடுபடுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்தப் பணி குறித்து கழக நிர்வாகிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை தலைமைக் கழகத்துக்கு அவ்வப்போது கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News