தமிழ்நாடு செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்: ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது

Published On 2023-09-17 10:38 IST   |   Update On 2023-09-17 10:38:00 IST
  • அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
  • கோவில் வளாகம் மற்றும் கடற்கரை திருவிழா காலம் போல் காட்சியளித்தது.

திருச்செந்தூர்:

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

கடற்கரை அருகில் அமைந்திருப்பதால், திருவிழா காலங்களில் தவிர்த்து மற்ற சாதாரண நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் மற்றும் சுப முகூர்த்த நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெறுகிறது.

மேலும் சுப முகூர்த்த நாள் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான திருமண ஜோடிகள், பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இன்று ஏராளமான திருமணங்கள் நடந்தது. இதனால் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை திருவிழா காலம் போல் காட்சியளித்தது. அதிகாலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி பொது தரிசனத்தில் சுமார் 5 மணி நேரமும், ரூ.100 கட்டண தரிசனத்தில் சுமார் 3 மணி நேரமும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

Similar News