தமிழ்நாடு

புதுப்பிக்கப்படும் வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் திறந்து வைப்பார்: அமைச்சர் எ.வ.வேலு

Published On 2024-02-22 09:02 GMT   |   Update On 2024-02-22 09:02 GMT
  • சுமார் 5 ஏக்கர் நில பரப்பளவில் திராவிட கலை மற்றும் பல்லவர் கட்டிடக்கலையுடன் வள்ளுவர் கோட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும்.

சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது எழிலன் எம்.எல்.ஏ., வள்ளுவர் கோட்டத்தின் புனரமைக்கும் பணிகள் எப்போது முடிவடையும் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

வள்ளுவர் கோட்டம் அமைப்பதற்காக கடந்த 1974-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் அடிக்கல் நாட்டப்பட்டு 1976-ம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

மேலும், சுமார் 5 ஏக்கர் நில பரப்பளவில் திராவிட கலை மற்றும் பல்லவர் கட்டிடக்கலையுடன் வள்ளுவர் கோட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கல் தேர் 128 அடி உயரம் கொண்டதாகவும் 67 மீட்டர் நீலம் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளாக வள்ளுவர் கோட்டம் பாழடைந்து இருந்த நிலையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்க ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போதுள்ள தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கலையரங்கம், மாற்றுத்திறனாளிகள் நடைபாதை, உணவு கூடம், விற்பனை கூடம், மழை நீர் சேகரிப்பு வசதி, ஒலி ஒளி காட்சி கூடம், நுழைவாயில் புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும். ஆனால் முன்னதாகவே பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். விரைவில் முதலமைச்சர் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைப்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News