தமிழ்நாடு செய்திகள்

ரெயில்வே தண்டவாளத்தில் 10-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்: புத்தக பை வேறு இடத்தில் மீட்பு

Published On 2023-11-21 15:26 IST   |   Update On 2023-11-21 15:26:00 IST
  • தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
  • மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா?

ஜோலார்பேட்டை:

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கார்த்திகேயபுரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மகள் பிரித்திங்கா ( வயது 15).

இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் மாணவி பள்ளிக்கு சென்றார். பள்ளியில் இருந்து மதியம் 1 மணி அளவில் வீட்டுக்கு செல்வதாக, சக மாணவிகளிடம் கூறிவிட்டு சென்றார்.

நேற்று மாலை நீண்ட நேரமாகியும் பிரித்திங்கா வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சடைந்த அவரது பெற்றோர் அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினர் எங்கும் அவர் கிடைக்கவில்லை.

குருநாதபுரம் ரெயில் தண்டவாளம் அருகே மாணவியின் புத்தகப் பை மற்றும் செருப்பு உள்ளிட்டவை கிடந்தன.

இது குறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர், விரைந்து சென்று அவற்றை பறிமுதல் செய்து தேடி வந்தனர்.

மேலும் குடியாத்தம் டவுன் போலீசில், மகளை காணவில்லை என புகார் அளித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை குடியாத்தம்-மேல்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே மாணவி பிரித்திங்கா பள்ளி சீருடையில் ரெயிலில் அடிபட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News