தமிழ்நாடு

ஆசிட் ஊற்றி 40 தென்னை மரங்கள் அழிப்பு: விவசாயி-மனைவி மீது வழக்கு

Published On 2023-06-19 05:32 GMT   |   Update On 2023-06-19 05:32 GMT
  • கடந்த ஏப்ரல் மாதம் 25ந் தேதி இரவு சுப்பிரமணியன், கவின்குமாருக்கு சொந்தமான 40 தென்னை மரங்கள் மீது ஆசிட் ஊற்றியதாக கூறப்படுகிறது.
  • பல்லடம் நீதிமன்றத்தில் விவசாயி கவின்குமார் வழக்கு தொடர்ந்தார்.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வடக்கு அவினாசி பாளையம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கவின்குமார் (வயது 37). இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் சுமார் 300 தென்னங்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறார். கவின் குமார் என்பவருக்கும் அவரது பக்கத்து தோட்டத்துக்காரர் சுப்பிரமணியன் என்பவருக்கும் ஏற்கனவே நிலத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 25ந் தேதி இரவு சுப்பிரமணியன், கவின்குமாருக்கு சொந்தமான 40 தென்னை மரங்கள் மீது ஆசிட் ஊற்றியதாக கூறப்படுகிறது. இதில் மரங்கள் முழுவதுமாக பட்டு போனது. இதுகுறித்து கவின்குமார் அவிநாசி பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இதுகுறித்து பல்லடம் நீதிமன்றத்தில் விவசாயி கவின்குமார் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி இச்சம்பவம் குறித்து உடனடியாக அவிநாசி பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிட் ஊற்றிய நபரை விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவுப்படி சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி கவிதா ஆகியோர் மீது அவிநாசி பாளையம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

வழக்கு பதிவு செய்து 15 நாட்கள் ஆகியும் இன்னும் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி கவிதா ஆகியோரை போலீசார் கைது செய்யவில்லை எனவும், வேளாண்மை துறை சார்பில் ஆசிட் ஊற்றியதால் பட்டுப்போன 40 தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயி கவின்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News