வாகன சோதனையில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் 2 போலீஸ்காரர்கள் படுகாயம்
- சொகுசு கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்கார்கள் மீது மோதியது.
- போலீஸ்காரர்கள் கோவளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருகார்த்திக் மற்றும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி அதிவேகமாக வந்த சொகுசு கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் மீது மோதியது. மேலும் அருகில் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் பேரிகார்டுகள் மீது மோதி நின்றது.
இதில் போலீஸ்காரர்கள் யோகேஸ்வரன், சுரேஷ் குமார் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் கோவளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். கார் மோதியதில் மோட்டார் சைக்கிள், பேரிகார்டு பலத்த சேதம் அடைந்தன.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் சொகுசு காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.