தமிழ்நாடு

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை: ஆவின் இனிப்பு, கார வகைகள் 10 ஆயிரம் இடங்களில் விற்க திட்டம்

Published On 2023-09-13 07:01 GMT   |   Update On 2023-09-13 07:01 GMT
  • ஆவின் நிறுவனம் இந்த ஆண்டும் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
  • புதிய வகை இனிப்பு வகைகளை தயாரித்து வழங்குவது தொடர்பாக எதுவும் முடிவு செய்யவில்லை.

சென்னை:

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இப்பாலைப் பதப்படுத்தி ஆரஞ்சு, பச்சை, நீலநிறப் பாக்கெட்டுகளில் அடைத்து ஆவின் நிறுவனம் விற்பனை செய்கிறது. இது தவிர வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்பட 225 வகையான பால் பொருட்களைத் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்கிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த ஆண்டு பண்டிகை காலங்களில் நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா, காஜு பிஸ்தா ரோல், நெய் அல்வா, கருப்பட்டி அல்வா, மிக்சர் உள்ளிட்டவற்றை தயாரித்து தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள், பொதுமக்கள் கூடும் சந்தைகள், சாலை சந்திப்புகள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் விற்பனை செய்யப்பட்டன.

இதன் மூலமாக ரூ.116 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. கடந்த ஆண்டு விற்பனை 40 சதவீதம் அதிகரித்தது. இதே போல இந்த ஆண்டும் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு பண்டிகை நெருங்கும் நிலையில் இனிப்பு, கார வகைகளை மொத்தமாக கொள்முதல் செய்ய சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட பல தனியார் நிறுவனங்கள் எங்களை தற்போது அணுகி வருகின்றன.

புதிய வகை இனிப்பு வகைகளை தயாரித்து வழங்குவது தொடர்பாக எதுவும் முடிவு செய்யவில்லை. அதே நேரத்தில் கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் மக்கள் அதிகம் விரும்பி வாங்கிய இனிப்பு வகைகள் உற்பத்தி அளவை அதிகரிக்கவும், ஏற்கனவே வழங்கும் இனிப்பு, கார வகைகள் தரத்தில் அதிக கவனம் செலுத்தவும் ஆலோசனை வழங்கி உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News