தமிழ்நாடு

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் புதிய வகை பறவைகள் வருகை

Published On 2024-02-13 09:45 GMT   |   Update On 2024-02-13 09:45 GMT
  • நீல நிற தொண்டை உடைய ஈ பிடிப்பான் குருவி இந்த ஆண்டு புதிய வரவு ஆகும்.
  • கடந்த ஆண்டு 130 பறவை இனங்களும், இந்த ஆண்டு 148 பறவை இனங்களும் வந்து உள்ளன.

வேளச்சேரி:

கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் போதுமான அளவு தண்ணீர் நிரம்பி உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

இதைத் தொடர்ந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள், வாத்து இனங்கள் வந்து உள்ளன. குறிப்பாக நீல நிற தொண்டை உடைய ஈ பிடிப்பான் குருவி இந்த ஆண்டு புதிய வரவு ஆகும்.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு பள்ளிக்க ரணை சதுப்பு நிலத்திற்கு கூடுதலாக பறவை இனங்கள் வந்து இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு 130 பறவை இனங்களும், இந்த ஆண்டு 148 பறவை இனங்களும் வந்து உள்ளன.

இதேபோல் கொரட்டூர் ஏரி, அம்பத்தூர் ஏரி, பெரும்பாக்கம் சதுப்பு நிலம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் விரிவாக்கம், போரூர் ஏரி, எண்ணூர் முகத்துவாரம், வண்டலூர் ஏரி, மடிப்பாக்கம் ஏரி உள்ளிட்ட 25 இடங்களில் இடம் பெயர்ந்து வரும் பறவைகள் அதிக அளவில் வந்திருப்பது கணக்கிடப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பறவைகள் நல ஆர்வலர்கள் கூறும் போது, நன்மங்கலம் ஏரியில் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டபோது சென்னையில் முதன்முறையாக நீல நிற தொண்டை உடைய நீலத் தொண்டை நீல ஈ பிடிப்பான் பறவை இருப்பது பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கணக்கெடுப்புக்காக 9 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பெரும்பாலும் தட்டை வாயன் வாத்து, சிறிய சீழ்க்கைச்சிரவி வாத்து, ஊசிவால் வாத்து, நாமத் தலை வாத்து உள்ளிட்டவை பரவலாக காணப்படுகிறது என்றனர்.

Tags:    

Similar News