அண்ணா நினைவு நாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி
- முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் வரும் பிப்ரவரி 3-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது.
- அமைதி பேரணி சேப்பாக்கம் வாலாஜா சாலை அண்ணா சிலையில் இருந்து தொடங்கி, அண்ணா நினைவிடத்தில் நிறைவடைகிறது.
சென்னை:
தமிழ்நாடு அரசின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் வரும் பிப்ரவரி 3-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளனர்.
அண்ணா நினைவு தினத்தையொட்டி தி.மு.க. சார்பில் அமைதி பேரணி 3-ந்தேதி நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் நிர்வாகிகள் அமைதி பேரணியில் பங்கேற்று, காலை 7 மணியளவில் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
இந்த அமைதி பேரணி சேப்பாக்கம் வாலாஜா சாலை அண்ணா சிலையில் இருந்து தொடங்கி, அண்ணா நினைவிடத்தில் நிறைவடைகிறது.
இந்த பேரணியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்,எம்.பி.க்கள், தி.மு.க. மாநில, மாவட்ட செயலாளர்கள், அணி நிர்வாகிகள் பங்கேற்க சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.