தமிழ்நாடு

உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2023-07-25 10:25 GMT   |   Update On 2023-07-25 10:25 GMT
  • திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
  • குடிநீர் மற்றும் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையில் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.

தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது. அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்தநிலையில் அணையின் நீராதாரங்களான கேரளா மாநிலத்தில் உள்ள மூணார், காந்தலூர், மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக ஆறுகள் மூலமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் 48.17 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 50.20 அடியாக உயர்ந்து ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.

குடிநீர் மற்றும் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையில் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அணையில் நீர் இருப்பு வேகமாக சரிந்து வந்தது. இந்த சூழலில் மழை பெய்து நீர் வரத்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அணைக்கு வினாடிக்கு 12 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News