மாமல்லபுரத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் கடலில் குதித்து தற்கொலை?- போலீசார் விசாரணை
- அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
- ஜேக்கின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாமல்லபுரம்:
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஜேக்(வயது65). இவரது மனைவி ஸ்டெல்லா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அனைவரும் மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் தங்கி இருந்து ஓட்டல் ஒன்றை நடத்தி வந்தனர். ஜேக்கிற்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதற்காக அவர் தொடர்ந்து மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்ததாக தெரிகிறது.
இதனால் அவர் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜேக் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் வடக்கு மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் ஜேக் பிணமாக கரை ஒதுங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து ஜேக்கின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜேக் கடலில் குதித்து தற்கொலைசெய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் பல்வேறு கோணங்களில தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.