சென்னை குடிநீர் ஏரிகளில் 59 சதவீதம் தண்ணீர் இருப்பு
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
- செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1469 கன அடி வரை தண்ணீர் வந்தது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11,757 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1469 கன அடி வரை தண்ணீர் வந்தது. தற்போது மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து இருக்கிறது.
இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் மொத்தக் 6,967 மி.கன. அடி தண்ணீர் உள்ளது. இது மொத்தம் கொள்ளளவில் 59 சதவீதம் ஆகும்.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2244 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 258 கனஅடி தண்ணீர் வருகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கனஅடி. இதில் 386 மி.கனஅடி நீர் உள்ளது. ஏரிக்கு 12 கனஅடி மட்டுமே தண்ணீர் வருகிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கன அடியில் 1347 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 610 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மி.கன அடியில் 419 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து இல்லை.