தமிழ்நாடு செய்திகள்

பள்ளி வளாகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ள காட்சி.

சாக்லேட் கொடுத்து 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: அரசு பள்ளி ஆசிரியர்-தாளாளரிடம் விசாரணை

Published On 2022-08-28 12:31 IST   |   Update On 2022-08-28 12:40:00 IST
  • பள்ளியின் சம்பந்தப்பட்டவர்களின் போட்டோக்களை காண்பித்து சிறுமியிடம் அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.
  • ஆசிரியர் காமராஜ் மீது போக்சோ உள்பட 5 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர்.

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மருத்துவம் பாடி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். உலகம்பட்டு அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி பிரபாவதி கங்கை சூடாமணி கிராமத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார்‌. இவர் அந்த பள்ளியின் தாளாளராக உள்ளார். காமராஜ் அடிக்கடி அவரது மனைவி நடத்தும் பள்ளிக்கு வந்து நிர்வாகத்தை கவனித்து வந்துள்ளார்.

அந்தப் பள்ளியில் யுகேஜி படிக்கும் 4 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. சிறுமிக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சேத்துப்பட்டு மற்றும் போளூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சிகிச்சை பெற்றனர்.

ஆனாலும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியை சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதை தெரிவித்தனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட சைல்டு லைன் பிரிவுக்கு தனியார் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது.

அவர்கள் திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதில் பள்ளிக்கு சென்ற சிறுமியை சாக்லேட் கொடுத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து பள்ளியின் சம்பந்தப்பட்டவர்களின் போட்டோக்களை காண்பித்து சிறுமியிடம் அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது பள்ளி தாளாளர் பிரபாவதியின் கணவர் காமராஜ் என்பது தெரிய வந்தது.

இந்த தகவல் வெளியானதும் நேற்று பள்ளி முன்பு பொதுமக்கள் திரண்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. பள்ளி வளாகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே திருச்செந்தூர் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த காமராஜை திருவண்ணாமலை மாவட்ட போலீசார் கொடுத்த தகவலின் பெயரில் எட்டயபுரம் போலீசார் மடக்கி பிடித்தனர். அவரை போளூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் நேற்று பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள ஆசிரியர்கள் பெற்றோர் ஊழியர்கள் ஆகிய இடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

ஆசிரியர் காமராஜ் மீது போக்சோ உள்பட 5 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசு பள்ளி ஆசிரியர் காமராஜ் மனைவியும் பள்ளி தாளாளருமான பிரபாவதியும் கைது செய்யப்பட்டார். ஆசிரியர் காமராஜை சஸ்பெண்டு செய்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தனியார் பள்ளி முன்பு 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. ஆசிரியர் காமராஜ், தாளாளர் பிரபாவதியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News