சத்தியமங்கலம் அருகே ரூ.4 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் கடத்தி வந்த 3 பேர் கைது
- சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
- போதை பொருட்கள் கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன், தனிப்பிரிவு போலீஸ் சதாசிவம் மற்றும் போலீசார் இணைந்து நள்ளிரவு 1 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக 3 பேர் 2 மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அந்த மோட்டார்சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட கஞ்சா ஒரு கிலோ, பான் மசாலா ஹான்ஸ் 30 கிலோ, விமல் பாக்கு 33 கிலோ, கூல் லிப் 12 என மொத்தம் 97 கிலோ போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்பனைக்கு கொண்டு சென்றதை ஒப்புக்கொண்டனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும்.
இதனையடுத்து போலீசார் அவர்கள் குறித்து விசாரணை நடத்தியபோது அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி, கே.எம்.எஸ். ஹவுஸ் வீடியோ சேர்ந்த அபூபக்கர் (50), புதுக்கோட்டை மாவட்டம், அம்மாபட்டினம், வடக்கு தெருவை சேர்ந்த முகமது இட்ரோஸ் (27), மணல் மேல்குடி, வடக்கு தெருவை சேர்ந்த ஷேக் அப்துல்லா அகமது (27) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் பிரிவு வி.என்.எஸ் நகர் பகுதியில் தங்கியிருந்து போதை பொருட்களை வாங்கி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 97 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார்சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போதை பொருட்கள் கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.