தமிழ்நாடு செய்திகள்

மழையால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பயணிகள்- சென்னையில் இருந்து புறப்படும் 28 விமானங்கள் தாமதம்

Published On 2022-11-11 14:22 IST   |   Update On 2022-11-11 14:22:00 IST
  • சென்னைக்கு வரும் அனைத்தும் விமானங்களும் சரியான நேரத்தில் வந்து தரை இறங்குகின்றது.
  • பெருமளவு பயணிகள் தாமதமாக வருவதால் விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.

ஆலந்தூர்:

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழையால், சென்னை விமான நிலையத்திற்கு விமான பயணிகள், விமானங்களை இயக்கும் விமானிகள், விமான ஊழியர்கள் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் புறப்படுவதில் தாமதமாகி வருகின்றன.

சென்னையில் இருந்து பிராங்க்பர்ட் செல்லும் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம், பிரான்ஸ் செல்லும் ஏர் பிரான்ஸ் விமானம் மற்றும் துபாய் தோகா, சார்ஜா, கத்தார், இலங்கை, கோலாலம்பூர், சிங்கப்பூர் உள்பட 12 சர்வதேச விமானங்கள், மும்பை, டெல்லி, அந்தமான், கொல்கத்தா, விஜயவாடா, மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்கு செல்லும் 16 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 28 விமானங்கள் 30 நிமிடங்களில் இருந்து, ஒரு மணி நேரம் வரை புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

ஆனால் சென்னைக்கு வரும் அனைத்தும் விமானங்களும் சரியான நேரத்தில் வந்து தரை இறங்குகின்றது.

சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் தாமதத்திற்கு காரணம் விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள், விமான பணிப்பெண்கள் போன்ற ஊழியர்கள் அனைவரும் சென்னை நகரில் உள்ள ஹோட்டல்களில் இருந்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக அவர்கள் விமான நிலையத்துக்கு தாமதமாக வருகின்றனர். அதேபோல் விமான பயணிகள் வருகையிலும் தாமதம் ஏற்படுகின்றது. பெருமளவு பயணிகள் தாமதமாக வருவதால் விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. மேலும் தொடர்ந்து மழை பெய்வதால் பயணிகளின் உடைமைகளை விமானத்தில் கொண்டு போய் ஏற்றுவது, பயணிகளுக்கு தேவையான உணவுகளைக் கொண்டு சென்று விமானங்களில் ஏற்றுவது, விமானங்கள் பராமரிப்பு போன்ற பணிகளிலும் தாமதம் ஏற்படுகிறது.

Tags:    

Similar News