தமிழ்நாடு
ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கும் ரோஜா பூக்கள்.

ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர 40 ஆயிரம் செடிகள் தயார்

Published On 2022-05-11 04:04 GMT   |   Update On 2022-05-11 04:04 GMT
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற 14 மற்றும் 15ந் தேதிகளில் 17வது ரோஜா கண்காட்சி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
ஊட்டி:

கோடை சீசனையொட்டி நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஊட்டி ரோஜா பூங்கா நீலகிரியில் சுற்றுலா தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

சுற்றுலா பயணிகள் பூங்காவுக்குள் நுழைந்ததும் அவர்களை வரவேற்கும் வகையில் மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை என பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.

அங்கு அமைக்கப்பட்டு உள்ள 4 காட்சி முனைகளில் நின்றபடி பூங்காவின் பல்வேறு பகுதிகளை கண்டு ரசிக்கலாம். சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வு எடுக்க நிழற்குடைகள், நிலா மாடம் ஆகியவை உள்ளன. கிணற்றை சுற்றி ஹெரிடேஜ் கார்டன் உள்ளது. அங்கு டேபிள் ரோஜாக்கள் பூத்துக்குலுங்குகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ரோஜா கண்காட்சி நடத்தப்படவில்லை. தற்போது தொற்று குறைந்துள்ளதை தொடர்ந்து இந்த ஆண்டு கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

வருகிற 14 மற்றும் 15ந் தேதிகளில் 17வது ரோஜா கண்காட்சி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

இரண்டு நாட்கள் நடக்கும் கண்காட்சியையொட்டி பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் 4 ஆயிரம் ரகங்களை கொண்ட 40 ஆயிரம் ரோஜா செடிகள் தயார் நிலையில் உள்ளன. தற்போது ரோஜா செடிகளில் ரோஜாக்கள் பூத்து குலுங்குகிறது. இதனை அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.


Tags:    

Similar News