தமிழ்நாடு
விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை

Published On 2022-04-29 06:21 GMT   |   Update On 2022-04-29 06:21 GMT
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
கோவை:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017ல் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.

இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

இந்த வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு முதல் இந்த வழக்கில் மறு விசாரணை நடந்து வருகிறது.

இதற்காக அமைக்கப்பட்ட 5 தனிப்படை போலீசார் கோவை, சேலம், நீலகிரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், சாட்சிகள் என இதுவரை 220க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த வாரத்தில் இருந்து இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, அவரது மகன், தம்பி மகன், முன்னாள் உதவியாளர், அ.தி.மு.க. பிரமுகர் அனுபவ் ரவியிடம் விசாரணை நடந்தது.

அதனை தொடர்ந்து கடந்த வாரம் சென்னையில் உள்ள சசிகலாவின் வீட்டில் வைத்து அவரிடம் 2 நாட்கள் கொடநாடு வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் தனக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்ததாகவும், அதனை போலீசார் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி சஜீவன், அவரது சகோதரர் சிபி ஆகியோரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இவர்களிடமும் பல்வேறு கேள்விகளை கேட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் என்பவரிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி அவர் இன்று காலை 10 மணியளவில் கோவை வந்தார். அவரை தனிப்படை போலீசார் கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு வைத்து அவரிடம் இந்த வழக்கு தொடர்பான கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர். அவரும் தனக்கு தெரிந்த தகவல்கள் அனைத்தையும் தனிப்படை போலீசாரிடம் தெரிவித்தார்.
Tags:    

Similar News