தமிழ்நாடு செய்திகள்
ரன்னிமேடு பகுதியில் வனத்துறையினரை துரத்திய காட்டுயானை

குன்னூர் அருகே யானை விரட்டும் பணி: வனத்துறையினரை துரத்திய காட்டு யானை

Published On 2022-04-16 09:02 IST   |   Update On 2022-04-16 09:02:00 IST
குன்னூர் வனப்பகுதிக்கு 2 குட்டிகளுடன் வந்த 9 காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி பர்லியார் மரப்பாலம், காட்டேரி, கிளன்டேல், பில்லிமலை, உலிக்கல் பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது.
குன்னூர்:

கோடை வறட்சி காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதிக்கு யானைகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

குன்னூர் வனப்பகுதிக்கு 2 குட்டிகளுடன் வந்த 9 காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி, பர்லியார் மரப்பாலம், காட்டேரி, கிளன்டேல், பில்லிமலை, உலிக்கல் பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது.

அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்த்து வரக் கூடிய வாழைமரங்கள், மலர்த்தொட்டிகளை சேதப்படுத்தி அட்டகாசத்திலும் ஈடுபடுகிறது. இந்த நிலையில் நேற்று காலை ரன்னிமேடு ரெயில் நிலைய பகுதிகளில் இந்த யானைகள் கூட்டம் சுற்றி திரிந்தது.

இதனையறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் யானைகளை அங்கிருந்து வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் இறங்கினர். அப்போது அருகே உள்ள காட்டேரி பூங்காவில் நின்றிருந்த சுற்றுலா பயணிகள் சிலர் யானைகளை கண்டதும் ரெயில் நிலையத்துக்கு வந்து யானைகளை புகைப்படம் எடுக்க முயன்றனர்.

வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு யானையை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு காட்டு யானை ஆவேசம் அடைந்து வனத்துறையினரை நோக்கி வேகமாக ஓடி வந்தது.

இதனை பார்த்த வனத்துறையினர், சுற்றுலா பயணிகள் யானையிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு யானை கூட்டம் அங்கிருந்து ரன்னிமேடு பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சென்று விட்டது.



Similar News