தமிழ்நாடு செய்திகள்
வீராணம் ஏரி

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு கூடுதல் தண்ணீர் அனுப்பிவைப்பு

Published On 2022-03-13 10:21 IST   |   Update On 2022-03-13 10:21:00 IST
கடந்த 2 நாட்களாக வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
காட்டுமன்னார் கோவில்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

இந்த ஏரியால் சுமார் 44,856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரிக்கு பருவமழை காலங்களிலும், மேட்டூர் அணை மூலமும் தண்ணீர் வரத்து இருக்கும்.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பியது. அதன் பின்னர் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் தொடர்ந்து நீர்மட்டம் சரிய தொடங்கியது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். சென்னைக்கு அனுப்ப கூடிய குடிநீர் அளவும் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. எனவே ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கத்தொடங்கியது. இன்று 591 கனஅடி நீர் ஏரிக்கு வருகிறது. காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 43.10 அடியாக உள்ளது.

கடந்த வாரம் சென்னை மாநகர் குடிநீருக்காக 65 கனஅடி நீர் மட்டுமே அனுப்பப்பட்டது. தற்போது 70 கன அடியாக நீர் சென்னைக்கு அனுப்பப்படுகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் கூடுதலாக சென்னை மாநகருக்கு தண்ணீர் அனுப்பப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News