தமிழ்நாடு செய்திகள்
சம்பவ இடத்தில் கிடந்த மின்சார ஒயர்

விவசாயியை கொலை செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

Published On 2022-03-09 11:51 IST   |   Update On 2022-03-09 11:51:00 IST
விவசாயியை கொலை செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சொரகுளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது26). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை(45). சரண்ராஜிக்கும் ஏழுமலைக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஏழுமலை, சரண்ராஜை கொலை செய்ய திட்டம் தீட்டிவந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு சரண்ராஜ் தனது நிலத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் இரும்பு கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

இதனையறிந்த ஏழுமலை சரண்ராஜை கொலை செய்ய அங்கு சென்றார். மின்சார ஒயரை அங்கு சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் கொக்கி போட்டு சரண்ராஜை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றார்.

அப்போது சரண்ராஜ் விழித்து கொண்டு கத்தி கூச்சலிட்டார். அதை கேட்டு பக்கத்து வீட்டில் படுத்திருந்த ரேணுகோபால்(33) என்பவர் ஓடி வந்து தடுத்தார்.

இருட்டில் ஏழுமலை கையில் வைத்திருந்த மின்சார வயரை கவனிக்காமல் ரேணுகோபால் பிடித்ததால் ஏழுமலை மற்றும் ரேணுகோபால் ஆகிய இருவரும் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சரண்ராஜ் இதுபற்றி கலசபாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்சாரம் தாக்கி பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து கலசபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 பேர் பலியான சம்பவம் கலசபாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Similar News