தமிழ்நாடு செய்திகள்
வீராணம் ஏரி

நீர் பிடிப்பு பகுதியில் மழை- வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2022-03-06 12:06 IST   |   Update On 2022-03-06 12:06:00 IST
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த 2 நாட்களாக வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
காட்டுமன்னார்கோவில்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும்.

இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் ராட்சத குழாய் மூலம் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணை, பருவ காலங்களில் பெய்யும் மழை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் 3 முறை வீராணம் ஏரி நிரம்பியது.

தற்போது கடைமடை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. அதோடு கோடை வெயிலும் தொடங்கியதால் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை.

ஆனால் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த 2 நாட்களாக வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி 1,068 கனஅடி நீர் வருகிறது. நேற்று 42.70 ஆக இருந்த நீர்மட்டம் இன்று 42.75 ஆக உயர்ந்துள்ளது. சென்னை மாநகர குடிநீருக்காக 65 கன அடி நீர் அனுப்பப்படுகிறது. நேற்று 63 கனஅடி நீர் மட்டுமே அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News