தமிழ்நாடு
மெட்ரோ ரெயில்

2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம்- 48 சுரங்க நிலையங்கள் அமைக்கப்படுகிறது

Published On 2022-01-17 09:19 GMT   |   Update On 2022-01-17 09:19 GMT
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் முதலில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. 3 வழித் தடங்களில் மொத்தம் 48 சுரங்க ரெயில் நிலையங்கள் அமையவுள்ளன. சுரங்கம் தோண்ட எந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.

சென்னை:

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இதைத் தொடர்ந்து ரூ.63 ஆயிரத்து 246 கோடியில் 118.9 கி.மீ. தூரத்துக்கு 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தில் களங்கரை விளக்கம்- பூந்தமல்லி வரை 26.1 கி.மீ., மாதவரம்- சோழிங்கநல்லூர் வரை 46 கி.மீ., மாதவரம்- சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தொலைவுக்கு 3 வழித் தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.

மாதவரம்- சிறுசேரி சிப்காட் இடையே மெட்ரோ ரெயில் பாதையில் 50 நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் 20 நிலையங்கள் தரைக்கு மேலும், 30 நிலையங்கள் சுரங்கத்திலும் அமைய உள்ளன.

இந்த திட்டத்தில் முதல் கட்டமாக மாதவரம்- தரமணி இணைப்பு சாலை வரை 35.67 கி.மீ., மாதவரம்-சி.எம்.பி.டி. இடையே 16.34 கி.மீ. என மொத்தம் 52.01 கி.மீ. தொலைவுக்கு பாதை அமைக்கப்படுகிறது.

இது தவிர களங்கரை விளக்கம்- பூந்தமல்லி இடையே 26.01 கி.மீ. தூரம் பாதைஅமையவுள்ளது. இந்த 3 பாதைகளிலும் மொத்தம் 78.02 கி.மீ. மெட்ரோ ரெயில் பணிக்கு ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் ஆரம்பகட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதில் 12 இடங்களில் பாதை மற்றும் சுரங்கப்பாதை அமைப்பற்கு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இது தவிர 48 சுரங்க ரெயில் நிலையங்கள் அமைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக சுரங்கம் தோண்டும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட எந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி கூறும் போது, ‘மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் முதலில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. 3 வழித் தடங்களில் மொத்தம் 48 சுரங்க ரெயில் நிலையங்கள் அமையவுள்ளன. சுரங்கம் தோண்ட எந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.

தற்போது முதற்கட்டமாக 30 நிலையங்கள் இடையே சுரங்கப்பாதை அமைக்க 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து ஒப்பந்ததாரர்களால் கொண்டுவரப் பட்டுள்ளன.

சுரங்கம் தோண்டும் நவீன தொழில்நுட்பம் கொண்ட எந்திரங்கள் சீனாவில் இருந்து கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதனை மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஆய்வு செய்து அனுமதி அளித்தபின்பு கொண்டுவரப்படும் என்றார்.

Tags:    

Similar News