தமிழ்நாடு செய்திகள்
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மா.கொளக்குடி எல்.யி.பி நகரில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதை காணலாம்

கடலூர் மாவட்டத்தில் 3-வது நாளாக பலத்த மழை

Published On 2022-01-01 11:21 IST   |   Update On 2022-01-01 11:21:00 IST
கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, நெய்வேலி, புவனகிரி, சிதம்பரம், விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.
கடலூர்:

தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் 25-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து கடலூர் மாவட்டத்தில் ஒரு மாதமாக கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் கரையோர கிராமங்களுக்குள் புகுந்ததால் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மிதந்தது.

அதன் பின்னர் மழையின் தாக்கம் ஓரளவு குறைந்தது. மார்கழி மாதம் பிறந்ததில் இருந்து கடும் குளிர் நிலவியது. இந்த நிலையில் கடலோர மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கடலூர் நகர் பகுதியில் கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் மீண்டும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் கடலூர் மாவட்டம் ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டுள்ளது.

இந்த மழை இன்று அதிகாலை 1 மணி வரை நீடித்தது. இன்று 3-வது நாளாக அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பண்ருட்டி, நெய்வேலி, புவனகிரி, சிதம்பரம், விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழை நெற்பயிருக்கு நல்லது என்று விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது நெற்பயிரில் வெள்ளைப்பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் இந்த பூச்சிகளின் தாக்குதல் குறைந்து விடும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுதவிர பண்ருட்டி, காடாம்புலியூர், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் முந்திரிதோப்புகள் அதிகளவில் உள்ளது. தற்போது முந்திரியில் பூப்பூக்கும் தருணம் ஆகும். எனவே இந்த மழை சிறப்பு வாய்ந்ததாக விவசாயிகள் கருதுகிறார்கள்.

Similar News