செய்திகள்
சசிகலா

எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி புகழ் நிலைத்து நிற்க வேண்டும்- சசிகலா

Published On 2021-11-30 07:08 GMT   |   Update On 2021-11-30 07:08 GMT
ஜெயலலிதாவின் கரங்களை வலுப்படுத்தவும் கட்சி, சின்னம், தலைமை அலுவலகம் என அனைத்தையும் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்த பெருமைக்குரியவர் ஜானகி என சசிகலா கூறியுள்ளார்.
சென்னை:

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எம்.ஜி.ஆரின் மனைவியும், தமிழக முன்னாள் முதல்வருமான வி.என்.ஜானகியின் 98-வது பிறந்தநாளை கொண்டாடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜானகி 1923-ம் ஆண்டு நவம்பர் 30-ந்தேதி கேரளாவில் உள்ள வைக்கத்தில் ராஜகோபால் அய்யர்- நாராயணி தம்பதிக்கு மகளாகப் பிறந்தார். தன் தந்தை தமிழ் ஆசிரியராக பணிபுரிந்த கும்பகோணம் சிறுமலர் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்த ஜானகி, அதன் பிறகு அவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்ததும், அவர்களோடு சென்னை மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள மாரிச்செட்டில் வசித்து வந்தார்.

ராஜகோபாலுக்கு திரைப்படத்தில் இசையமைப்பது, பாடல் எழுதுவது என வாய்ப்புகள் வந்தன. மேலும் தன் சகோதரர் பாபநாசம் சிவனோடு இணைந்து பல வெள்ளி விழா படங்களுக்கும், முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கும் பாடல்கள் எழுதி, இசையமைத்தார்.

சிறுபிள்ளையாக இருந்த ஜானகி பல மொழிகளை கற்றுக்கொண்டார். அதே போன்று பல்வேறு நடன கலைகளையும், சண்டை பயிற்சிகளையும் கற்றுக் கொண்டு சிறந்து விளங்கினார். மேலும், இயக்குனர் கே.சுப்பிரமணியம் தோற்றுவித்த ‘நிருத்யோதயா’ பள்ளியில் முறையாக நாட்டியம் பயின்ற இவர், ‘நடன கலா சேவா’ நாட்டியக் குழுவில் சேர்ந்து பல நாட்டிய நாடகங்களில் நடித்துள்ளார்.

அதன் பின்னர் 1937-ம் ஆண்டு தனது திரைப்பயணத்தை தொடங்கி ஜானகி, 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக எம்.ஜி. ஆருடன் ராஜமுக்தி, மோகினி, மருதநாட்டு இளவரசி, நாம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.

1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது கட்சியில் உறுப்பினராகவும் தன்னை இணைத்துக் கொண்ட ஜானகி, புரட்சித் தலைவரின் அரசியல் செயல்பாடுகளுக்கு பக்க பலமாக உறுதுணையாகவும் இருந்தார். தனது வருமானத்தில் சென்னை லாயிட்ஸ் சாலையில் வாங்கிய வீட்டை, புரட்சித்தலைவருக்கு கொடுத்ததையும் இந்த இடத்தில் தான் தற்போது நம் கட்சியின் தலைமைக் கழகம் செயல்பட்டு வருகிறது என்பதையும் இந்த நேரத்தில் நினைத்து பார்க்கிறேன்.

மேலும் 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு தமிழகத்தின் முதல் பெண் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜானகி அம்மையார், அதன் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் கரங்களை வலுப்படுத்தவும் கட்சி, சின்னம், தலைமை அலுவலகம் என அனைத்தையும் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்த பெருமைக்குரியவர் ஜானகி. இந்த காலகட்டங்களில், அவரோடு பழகிய அந்த இனிமையான நாட்களை நினைத்து பார்க்கும்போது இன்றும் என் மனதில் பசுமையாக தோன்றுகிறது.

சென்னை தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தையும், ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் இல்லம் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். காதுகேளாத மற்றும் வாய்ப்பேச முடியாததோருக்கான இல்லம், பள்ளியை சிறப்பாக நிர்வாகம் செய்து வந்தார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழிவந்த தொண்டர்கள் சார்பாகவும், ஜானகி அம்மையாரின் 98-வது பிறந்த நாளை கொண்டாடும் இவ்வேளையில் அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு சசிகலா கூறியுள்ளார்.
Tags:    

Similar News