செய்திகள்
அரிய வகை பறவை மீன்

மன்னார் வளைகுடாவில் சிக்கிய அரிய வகை பறவை மீன்

Published On 2021-11-09 10:15 IST   |   Update On 2021-11-09 10:15:00 IST
கடலில் தொடர்ந்து 1300 மீட்டர் தொலைவுக்கு எக்ஸோகோடிடடே மீனால் பறக்க முடியும். இதன் வால் நிமிடத்திற்கு சுமார் 70 முறை வேகமாக அசைக்கக்கூடியது.
கீழக்கரை:

கீழக்கரை கடல் பகுதியில் முத்துராஜ் நகரைச் சேர்ந்த முரளி என்பவரின் வலையில் இறக்கைகளுடன் அரிய வகை சிறிய ரக மீன் சிக்கியது. வண்ணத்துப்பூச்சி போன்ற தோற்றத்தில் இறக்கைகளுடன் கூடிய இந்த வகை மீன் ‘எக்ஸோகோடிடடே’ என்ற குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கடல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதனை பறக்கும் மீன் என்றும் அழைக்கின்றனர்.

அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடலில் இந்த மீன் அதிகம் காணப்படுகிறது. பொதுவாக மீன் நீந்துவதற்கு அதன் துடுப்புகளையே பயன்படுத்தும். இந்த மீன் அதைப் பறக்கவும் பயன்படுத்திக் கொள்வது சிறப்பாகும்.

கடலில் தொடர்ந்து 1300 மீட்டர் தொலைவுக்கு எக்ஸோகோடிடடே மீனால் பறக்க முடியும். இதன் வால் நிமிடத்திற்கு சுமார் 70 முறை வேகமாக அசைக்கக்கூடியது. அதனால் உடலை சமநிலைப்படுத்தி தனது இறக்கையை விரித்து டால்பின் போல தண்ணீரில் இருந்து மேலே எழும்பிப் பறக்கிறது.

நீரினுள் இருக்கும்போதே பறப்பதற்கு முன் வேகமெடுத்து, நீரின் மேற்பரப்பை நோக்கி இந்த மீன் நீந்தி வரும். நீர்பரப்பை அடைந்ததும் தன் துடுப்புகளை முழுவதும் விரித்துத் துள்ளித்தாவும். சுமார் 20 அடி உயரம் வரை இந்த மீன் பறக்கும் என்று கடல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.



Tags:    

Similar News