செய்திகள்
ஆசிரியர் சுப்பிரமணியன்.

சிதம்பரத்தில் மாணவனை அடித்த அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்டு

Published On 2021-10-15 03:55 GMT   |   Update On 2021-10-15 03:55 GMT
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாணவனை அடித்த அரசு பள்ளி ஆசிரியர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிதம்பரம்:

கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியதையடுத்து ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் சிலர் வகுப்புகளுக்கு சரியாக செல்லாமல் வெளியே சுற்றுவதாக புகார் வந்தன.

இதைத்தொடர்ந்து மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் கண்காணித்தனர். அப்போது அந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் அம்மாபேட்டையை சேர்ந்த சஞ்சய் (வயது 17), அஜய்குமார், நெக்டாபாலன், சுசீந்திரன், சூர்யா, சந்துரு ஆகிய மாணவர்கள் ஒருசில வகுப்புகளை புறக்கணித்து வெளியே சுற்றுவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாணவர்களை பள்ளி இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் (55) அழைத்து கண்டித்தார்.

இதையடுத்து அந்த மாணவர்களை ஆசிரியர் சுப்பிரமணியன் முட்டிபோட வைத்தும், பிரம்பால் அடித்து உதைத்தார். இதனை வகுப்பில் இருந்த மாணவர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்தனர். அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவியது. இதைபார்த்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசில் மாணவன் சஞ்சய் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து ஆசிரியர் சுப்பிரமணியனை கைது செய்தனர்.

பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிதம்பரம் கிளை சிறையில் அடைத்தனர். மாணவர்களை ஆசிரியர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ஆசிரியர் சுப்பிரமணியனை சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News