செய்திகள்
பெரியாறு அணை

பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடி உயருமா?- தமிழக, கேரள அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை

Published On 2021-09-14 05:03 GMT   |   Update On 2021-09-14 05:03 GMT
தமிழக, கேரள மாநிலங்களில் கூடுதல் முதன்மை செயலாளர்களின் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
கூடலூர்:

சென்னையில் இன்று நடைபெற உள்ள தமிழக, கேரள முதன்மை செயலர்கள் கூட்டத்தில் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது. ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய மூவர் குழு மற்றும் ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரு மாநில பிரதிநிதிகளை உள்ளடக்கிய இக்குழுவினர் அவ்வப்போது முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டு அதன் அறிக்கையை மூவர் குழுவுக்கு அளித்து வருகின்றனர்.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு 3 முறை மட்டுமே அணையின் நீர் மட்டம் 142 அடி வரை தேக்கப்பட்டது. அதன் பிறகு பல முறை அணையின் நீர்மட்டம் 142 அடியை நெருங்கும்போது அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு விடுகிறது.

பேபி அணையை பலப்படுத்தி விட்டு முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் அது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பொதுப் பணித்துறையினர் உள்ளனர்.

இந்த கோரிக்கையை தொடர்ந்து விவசாய பிரதிநிதிகள் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ஐவர் குழு ஆய்வுக்கு வரும்போது கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தமிழக, கேரள மாநிலங்களில் கூடுதல் முதன்மை செயலாளர்களின் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சத்சேனா மற்றும் கேரள நீர் வளத்துறை செயலாளர் டி.கே.ஜோஸ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 152 அடி தண்ணீர் தேக்குதல், பேபி அணையை பலப்படுத்துதல், இதற்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்ட அனுமதி பெறுதல், பெரியாறு அணைக்கு தமிழக அதிகாரிகள் செல்வதற்காக வாங்கிய தமிழ் அன்னை படகுக்கு அனுமதி வழங்குதல் உள்ளிட்டவை குறித்தும் ஆழியாறு, பரம்பிக்குளம் அணை பிரச்சினை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News