செய்திகள்
பவானிசாகர் அணை

100 அடியை எட்டியது பவானிசாகர் அணை

Published On 2021-07-26 04:05 GMT   |   Update On 2021-07-26 04:05 GMT
பவானிசாகர் அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் நீர்வரத்து ஆதாரங்களாக உள்ளது.
சத்தியமங்கலம்:

ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பல லட்சம் விவசாய விளை நிலங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் வழியாக 5 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதேபோல் பவானி ஆற்றில் 9 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தடப்பள்ளி -அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

பவானிசாகர் அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் நீர்வரத்து ஆதாரங்களாக உள்ளது. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து நீர் மின் உற்பத்திக்காக திறக்கப்படும் தண்ணீரும் முக்கிய நீர் ஆதாரங்களாக உள்ளது.

இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று மாலை 29-வது தடவையாக பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பை கருதி அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே பவானி ஆற்று வழியாக திறந்து விடப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் 9 கீழ் மதகுகள் மூலம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 100 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,324 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடியும், பவானி ஆற்றுக்கு 5,200 கன அடியும் திறந்து விடப்படுகிறது.

தற்போது திறக்கப்படும் உபரி நீர் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கும் போது பவானி ஆற்றின் மேல் மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போலீசார் வருவாய்த் துறையினர் தீயணைப்பு துறையினர் பொதுப்பணித் துறையினர் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பவானி ஆற்றில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பவானி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கோபி கொடிவேரி அணையில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

Tags:    

Similar News