செய்திகள்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.22 அடியை எட்டியதால் அணையில் கடல்போல் தண்ணீர் தேங்கி நிற்கும் காட்சி.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 11,456 கன அடியாக அதிகரிப்பு

Published On 2021-07-23 05:10 GMT   |   Update On 2021-07-23 05:10 GMT
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்று மாலைக்குள் அணை 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சத்தியமங்கலம்:

ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து பவானி ஆற்றில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இன்று அதிகாலை முதல் அந்த தண்ணீர் பவானிசாகர் அணைக்கு வரத் தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.22 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 456 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றில் 100 கன அடியும் என மொத்தம் 900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர்ந்து பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்று மாலைக்குள் அணை 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 105 அடி வரை கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டினாலே அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்படும்.

தற்போது தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வருவதால் கரையோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தாழ்வான இடங்களில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வருவாய்த்துறையினர் பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News