செய்திகள்
சஸ்பெண்டு

உதவித்தொகை முறைகேடு: பழங்குடியினர் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்டு

Published On 2021-04-20 09:11 GMT   |   Update On 2021-04-20 09:11 GMT
பழங்குடியின மாணவர்களுக்கு உணவு மற்றும் உதவித்தொகை என மொத்தம் ரூ.7 ஆயிரத்து 300 வழங்க நிதி ஒதுக்கப்பட்டது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் குஞ்சப்பனை, தேவாலா, பொன்னானி, கரிக்கையூர் உள்ளிட்ட 22 இடங்களில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் விடுதிகள் உள்ளன.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. அந்த சமயத்தில் பழங்குடியின மாணவர்களுக்கு உணவு மற்றும் உதவித்தொகை என மொத்தம் ரூ.7 ஆயிரத்து 300 வழங்க நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த தொகையை சம்பந்தப்பட்ட உண்டு உறைவிட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பழங்குடியின மாணவர்கள் அல்லது சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோர், பாதுகாவலர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். செலுத்திய பின்னர் அதனை அவர்கள் பெற்று கொண்டதனை உறுதிப்படுத்தும் பொருட்டு பணம் பெற்றவர்களிடம் கையெழுத்து பெற்று அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்த திட்டத்தில் மாணவர்களுக்கு முறையாக நிதி உதவி சென்று சேரவில்லை எனவும், இதில் லட்சக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவிதொகை பணத்தில் முறைகேடு செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து தேவாலா மற்றும் பொன்னானி பள்ளிகளில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் பாக்கியநேசன், சேகர் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News