செய்திகள்
வீராணம் ஏரி வறண்டுகிடக்கும் காட்சி.

3 ஆண்டுகளுக்கு பின் வறண்ட வீராணம் ஏரி

Published On 2021-04-12 04:54 GMT   |   Update On 2021-04-12 04:54 GMT
வீராணம் ஏரி வறண்டு போனதால் அந்த பகுதியை சுற்றி உள்ள கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி 18 கி.மீ. நீளமும், 8 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த ஏரிக்கு வடவாறு வழியாகவும், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலமும், பருவமழை காலங்களில் பெய்யும் மழையாலும் நீர்வரத்து அதிகம் இருக்கும்.

இந்த ஏரி மூலம் 44,450 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த ஆண்டு புயல், மழை காரணமாக ஏரி 4 முறை நிரம்பி வழிந்தது. தற்போது ஏரியில் தடுப்புகட்டை கட்டுவதற்காகவும், ஏரியை தூர்வார்வதற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்துள்ளது. தற்போது ஏரி வறண்டு காணப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு வீராணம் ஏரி வறண்டுபோனதால் அந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.

ஏரிக்குள் உள்ள சிறு சிறு குட்டைகளில் மீன்குஞ்சுகள் அதிகம் காணப்படும். தற்போது தண்ணீர் வற்றிபோனதால் மீன்குஞ்சுகள் அனைத்தும் செத்து மிதக்கிறது.



கோடை வெயில் காரணமாக ஏரியின் உள்பகுதி வெடிப்புடன் காணப்படுகிறது. வீராணம் ஏரி வறண்டு போனதால் அந்த பகுதியை சுற்றி உள்ள கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே எப்போது மழை பெய்யும் என்று கிராம மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.


Tags:    

Similar News