செய்திகள்
விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்- கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் பலி
விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள கோங்குடிபட்டியைச் சேர்ந்த சிதம்பரம் மகன் பாலசுப்பிரமணி (வயது 35). அதே ஊரைச் சேர்ந்த பிச்சை மகன் ராஜேந்திரன்(50). இருவரும் திருச்சி மாவட்டம் பாத்திமா நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் கட்டிட தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை இருவரும் மோட்டார் சைக்கிளில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இலுப்பூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
விராலிமலை அருகே உள்ள மேலபச்சகுடி கலிங்கி பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் சென்றபோது பின்னால் வந்து கொண்டிருந்த கார், மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், கட்டிட தொழிலாளர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலசுப்பிரமணி, ராஜேந்திரன் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து காரை ஓட்டி வந்த திருச்சி பாலக்கரை மல்லிகைபுரத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் ஜெரால்டு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.