செய்திகள்
வெள்ளைச்சாமி.

மேலூர் அருகே புதுமாப்பிள்ளை சரமாரி வெட்டிக்கொலை

Published On 2021-02-11 23:09 IST   |   Update On 2021-02-11 23:09:00 IST
மேலூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற புதுமாப்பிள்ளையை வழிமறித்து வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிய ஆடு திருட்டு கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலூர்:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பேப்பனையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரணன். இவரது மகன் வெள்ளைச்சாமி (வயது 29). கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவருக்கும், இவரது உறவுக்கார பெண்ணான பவானிக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று காலை பூதமங்கலம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வெள்ளைச்சாமி சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களுடன் அவரை வழிமறித்தது.

இதனால் பயந்து போன அவர் மோட்டார்சைக்கிளை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினார். அவரை அந்த கும்பல் ஓட, ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த அவர் துடிதுடித்து பரிதாபமாக பலியானார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு வனிதா, மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரகுபதி ராஜா, மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ், கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் வெள்ளைச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வெள்ளைச்சாமியை ஆடு திருடும் கும்பல் கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருகில் உள்ள கொன்னைப்பட்டியில் ஒருவரின் வீட்டில் ஒரு கும்பல் ஆடுகளை திருடியுள்ளது. அந்த கும்பலை கிராமத்தினர் பிடித்து கீழவளவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அதன்படி அட்டப்பட்டியை சேர்ந்த அய்யனார் (25), பிரபு (24), தர்மர் (27) மற்றும் சிலர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News