செய்திகள்
சென்னை விமான நிலையம்

துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த ரூ.98 லட்சம் தங்கம் பறிமுதல்

Published On 2020-11-17 07:35 IST   |   Update On 2020-11-17 07:35:00 IST
துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த ரூ.98 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 900 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது தரீக் (வயது 36), சையத் முகமது பாரீஸ் (34), தஸ்தகீர் (34), சென்னையை சேர்ந்த சிக்கந்தர் மஸ்தான் (34), ரகுமான்கான் (31) ஆகிய 5 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.

பின்னர் 5 பேரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள் கால் சட்டை மற்றும் உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து 5 பேரிடம் இருந்தும் ரூ.98 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 900 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News