செய்திகள்
சென்னை விமான நிலையம்

துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் ரூ.42½ லட்சம் தங்கம் கடத்தல்

Published On 2020-11-06 02:59 GMT   |   Update On 2020-11-06 02:59 GMT
துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.42½ லட்சம் மதிப்புள்ள 890 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அந்த விமானத்தில் வந்த சென்னையைச்சோ்ந்த முகமது (வயது 28) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவுமில்லை.

பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 360 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

அதேபோல் துபாயில் இருந்து வந்த மற்றொரு சிறப்பு விமானத்தில் வந்த மதுரையை சேர்ந்த ராசிக்அலி ஹாஜாமைதீன் (45) என்பவரை சந்தேகத்தின்பேரில் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அதில் அவர் உள்ளாடைக்குள் பிளாஸ்டிக் டப்பிகளில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.24 லட்சம் மதிப்புள்ள 530 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 890 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News